மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி நாட்டின் வளர்ச்சி 2020 - 21-ல் 6 முதல் 6.5 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த முறை வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11-ம்தேதி வரையில் நடைபெறவுள்ளது.
கடந்த 2008 - 09-ல் ஏற்பட்டதைப் போன்ற சர்வதேச பொருளாதார மந்த நிலையில் தற்போதும் ஏற்பட்டுள்ளதால், நாட்டின் வளர்ச்சி இந்த நிதியாண்டில் 5 சதவீதம் இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக 6.5 சதவீதம் வரையில் வளர்ச்சி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை - செப்டம்பரில் நாட்டின் வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்தது. இது ஆண்டுதோறும் வேலைக்காக லட்சக்கணக்கில் வரும் இளைஞர்களை கடுமையாக பாதித்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்றுமதிக்கு நெருக்கடியான சூழல் காணப்படுவதால் அதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியும் பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளுக்கான கட்டணத்தை குறைப்பதன் மூலம், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் இல்லங்களை விற்பனை செய்ய முடியும் என்று பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.